கோடி கொடுத்தாலும் எங்க அம்மா குணம் வரவே வராது என்று என் அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அது என்ன பெரிய குணம் என்று நான் யோசிப்பது உண்டு. என் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் வரை அந்த குணத்தினுடைய முழு தன்மையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நானும் என் தோழியும் கலகலப்பாக பேசிக்கொண்டு வகுப்பில் அரட்டை அடித்துக் கொண்டு பேருந்துகளில் அரட்டை அடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திரைப்படங்களில் வருவது போல எங்கள் வாழ்வு வசந்த காலமாக சென்று கொண்டிருக்கிறது. பல தோழிகளுடன் நான் நன்றாக பழகுவேன் என்றாலும் கூட அதில் குறிப்பிட்ட ஒருத்தி என் மீது அன்பாக இருப்பாள். ஆனால் நான் அனைவரிடமும் ஒன்றாகவே பழகுவேன் ஒரு மாதிரியாகவே இருப்பேன். ஒருமுறை ஆசிரியர் எங்களைத் திட்டும் பொழுது அவர் கேட்ட நேரத்தில் நான் என்னுடைய ஒப்படைப்பை தரவில்லை. அது என்னுடைய அவமதிப்பீட்டு தேர்வின் மதிப்பெண்ணை குறைப்பது போல ஒரு இக்கட்டான சூழ்நிலை. இந்த தருணத்தில் என்னுடைய தோழிகள், தோழிகளாக நான் கருதிய அனைவரும் அமைதியாக இருந்து தங்களின் குணத்தை காண்பித்தனர் அந்த குறிப்பிட்ட தோழி மட்டும் ஆசிரியரிடம் தனியாகச் சென்று, என்னுடைய வீட்டில் தந்தை மற்றும் தாயின் உடல்நலம் சரியில்லை என்பதை எடுத்துக் கூறி என்னுடைய ஒப்படைப்பு தாமதத்திற்கான உண்மையான காரணத்தையும் ஆசிரியரினுடைய மனம் கொள்ளும் விதத்தில் தெரிவித்து என்னை காப்பாற்றினாள். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. அப்பொழுது என் காதுகளில் என் தந்தையின் சொல் ஒன்று ஒலித்தது. அவங்கள மாதிரி குணம் வரவே வராது. என் தோழியின் குணமும் அப்படித்தான் அன்றிலிருந்து அவள் என் மனதுக்கு பிடித்தமானவளாக எப்பொழுதும் என் அருகிலேயே இருப்பவளாக மாறிப்போனாள்.