உயர்விற்கான திறவுகோல்

ஒரு சிறிய கிராமத்தில் ஹரிஷ் மற்றும் சங்கர் என்ற இரு இளைஞர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே ஊரில் வளர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை நிலைகளும் மனப்பான்மைகளும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. ஹரிஷின் குடும்பம் மிகுந்த ஏழ்மையில் தவித்தது; நாள்தோறும் உணவுக்கே போராட வேண்டிய சூழ்நிலை. ஆனால் சங்கரின் குடும்பம் அந்தக் கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தது. இந்தச் செல்வ வளமே சங்கருக்கு ஒரு தவறான பெருமிதத்தை உருவாக்கியது.

ஹரிஷ், தனது பெற்றோர் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து மனமுடைந்தான். அந்த வேதனை அவனை உடைக்கவில்லை; மாறாக, முன்னேற வேண்டும் என்ற உறுதியை உருவாக்கியது. “என் பெற்றோரின் வாழ்க்கையை மாற்ற வேண்டும்” என்ற தீவிர எண்ணம் அவன் மனதில் பதிந்தது. அதற்கான ஒரே வழி கல்வி என்பதை உணர்ந்த அவன், முழு மனதையும் படிப்பில் செலுத்தத் தொடங்கினான். தினமும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, ஒரு அரசுப் பணியைப் பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி அயராது உழைத்தான்.

இதற்கிடையில், தனது நண்பனான சங்கரையும் தேர்வுக்குத் தயாராக அழைத்தான். ஆனால் சங்கர், “பிறகு பார்த்துக்கலாம்” என்ற அலட்சியமான அணுகுமுறையுடன் அதை புறக்கணித்தான். தன்னிடம் ஏற்கனவே செல்வம் இருப்பதால் கல்வி அவசியமில்லை என்ற தவறான எண்ணம் அவனை வழிநடத்தியது. கல்வியின் உண்மையான மதிப்பை அவன் அப்போது உணரவில்லை.

மூன்றாவது முயற்சியில், தனது கடின உழைப்பின் பலனாக ஹரிஷ் அரசுப் பணியில் அமர்ந்தான். அவன் பெற்ற வெற்றி, அவனது வாழ்க்கையை மட்டுமல்ல, அவன் குடும்பத்தின் நிலையும் உயர்த்தியது. பெற்றோருக்காக ஒரு வீடு கட்டி, அவர்களை மரியாதையுடன் பார்த்துக் கொண்டான். அவனது உழைப்பும் பொறுமையும், “கல்வியே உயர்விற்கான திறவுகோல்” என்பதைக் காட்டியதாய் அமைந்தது.

மறுபுறம், சங்கரின் வாழ்க்கை மெதுவாக வீழ்ச்சியடைந்தது. கல்வியை புறக்கணித்ததால், அவனிடம் இருந்த செல்வம் நிலைத்திருக்கவில்லை. காலப்போக்கில், அந்தச் செல்வமும் சிதைந்து போனது. பெற்றோர்களையும் இழந்து, தனிமையிலும் வறுமையிலும் தவித்தான். அப்போதுதான் அவன் உணர்ந்தான் கல்வி மட்டுமே அழியாத செல்வம் என்று.

“வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது” என்ற சங்க பாடலுக்கு  இணையாக, கல்வி என்ற செல்வம் ஒருபோதும் அழியாதது. பிற செல்வங்கள் அனைத்தும் காலப்போக்கில் மறைந்து போகலாம்; ஆனால் கல்வி ஒருவரை வாழ்நாள் முழுவதும் உயர்த்திக் கொண்டே இருக்கும்.

எனவே, நாம் அனைவரும் கல்வியின் மதிப்பை உணர்ந்து, அதனை நம் வாழ்க்கையின் அடித்தளமாகக் கொள்ள வேண்டும். கல்வி மூலம் நம் வாழ்க்கையை மட்டுமல்ல, நம் குடும்பத்தையும், நமக்கு அறிவு தந்த ஆசிரியர்களையும், நம்மை உருவாக்கிய கல்வி நிலையங்களையும் பெருமைப்படுத்தும் நிலைக்கு உயர வேண்டும். கல்விச் செல்வமே மனிதனை உயர்த்தும் நித்திய செல்வம் என்பதை உணர்ந்து, அதனை அடைய நாம் விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *